Tamilnadu

குழந்தை உயிரிழந்த சோகத்தில் தாயும் உயிரிழப்பு.. இளம்பெண்ணுக்கு 12 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த நீதி!

விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

இதனால் சில நாட்களில் கர்ப்பமான அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சுரேஷிடம் கேட்டபோதும், திருமணத்திற்கு சுரேஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண் திருக்கோவிலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.

இதுதொடர்பான புகாரைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சுரேஷ் ஆஜரானார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றுள்ளது. அப்போது அவருக்கு குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்தது.

இதனால் மிகவும் சோர்வாக இருந்த அந்தப் பெண் அடுத்த ஒருவாரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து வந்தநிலையில், இளம்பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக சுரேஷூக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் சுரேஷ் அடைக்கப்பட்டார். 12 வருடத்திற்கு பிறகு இளம்பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளதாக உறவினர்கள் கூறிவருகின்றனர்.

Also Read: தவறான அறுவை சிகிச்சையால் பார்வை பறிபோன 15 பேரின் கண்கள் அகற்றம்... பீகாரில் அதிர்ச்சி சம்பவம்!