Tamilnadu

வரதட்சணைக்காக 6 இளம் பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

நெல்லை என்.ஜி.ஓ. காலணி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் விஜிலாராணி. இவருக்குத் தூத்துக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவருடன் 2020ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கான பெண்வீட்டார் 40 பவுன் தங்க நகை, ரூ. 3 லட்சம் பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்து மூன்று மாத்திலேயே வரதட்சணையாக வந்த நகைகளை வின்சென்ட் பாஸ்கர் விற்றுள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே வின்சென்ட் பாஸ்கர் ஐந்து பெண்களைத் திருமணம் செய்து வரதட்சணையாக வந்த பணம் மற்றும் நகைகளை ஏமாற்றியுள்ளார். மேலும் ஆறாவதாக விஜிலாராணியை திருமணம் செய்து, அவரது நகைகளை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த வின்சென்ட் பாஸ்கரை போலிஸார் கைது செய்தனர். மேலும் இந்த மோசடி திருமணங்களுக்கு உதவியாக இருந்த அவரது தாய் மற்றும் சித்தி, திருமண புரோக்கர் ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “எது எரிஞ்சா என்ன.. எங்களுக்கு சோறு முக்கியம்” : அசராமல் சாப்பிடும் உணவுப் பிரியர்கள்.. வைரலாகும் வீடியோ!