Tamilnadu

பரோட்டா வாங்கித் தருவதாக அழைத்து 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, தனது குழந்தைகளுடன் விளையாடிய 4 வயது சிறுமியை, பரோட்டா வாங்கியுள்ளதாகவும் அதனை சாப்பிட வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும் சிறுமியின் தாயிடம் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தனது குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு 4 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்தச் சிறுமி மீண்டும் தனது வீட்டிற்குச் சென்றபோது கால் வலிப்பதாக கூறியதால், அவரது தாய் விசாரித்துள்ளார். அப்போது உண்மை தெரியவந்ததை அடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இதுகுறித்த விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகன்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் கதவை தாழ்ப்பாள் போட்டதற்கு மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 26 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தீர்ப்பளித்தார்.

Also Read: 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய லாரி டிரைவர் : போக்சோவில் கைது!