Tamilnadu

கேரள பெண்ணிடம் மோசடி.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை!

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தார்.

அந்தப் பெண்ணின் புகாரில், “முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் ரூபாய் 14 கோடி மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டு, ரூபாய் 3 கோடியை மட்டும் தன்னிடம் அளித்ததாகவும் மீதி தொகையை பின்னர் தருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் சொன்னபடி அவர் பணத்தைத் திருப்பித் தரவில்லை. மீதி தொகையைக் கேட்டதால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிரட்டல் விடுக்கிறார். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு விஜயபாஸ்கரே காரணம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், சி.விஜயபாஸ்கர் இன்று காலை 10 மணியளவில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

விஜயபாஸ்கரிடம் கேரள அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்.18-ம் தேதி முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு.. நீங்க ஏன் வர்றீங்க..": OPS-ஐ காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்!