Tamilnadu

“மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு”: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ளது வெள்ளாந்தி மலையோர கிராமம். வெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் 90 வயது செம்பொன் காணி. இவருக்கு 85 வயது வள்ளியம்மாள் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

செம்பொன் காணி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். மனைவி அவருடன் இருந்து சேவை செய்து வந்தார். இந்த நிலையில் முதுமை மற்றும் நோய் காரணமாக நேற்றிரவு சென்பொன் காணி உயிரிழந்தார்.

இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் நடந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்த வள்ளியம்மாள், இன்று திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது, வள்ளியம்மாள் இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரது உடல்களையும் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. திருமணத்துக்கு பின்னர் பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி, சாவிலும் இணைபிரியாமல் சென்றது, அப்பகுதி பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read: “தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்தது தமிழ்நாடு அரசு” : ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் பெருமிதம்!