Tamilnadu

சைகை காட்டி படகை வரவழைத்து தனது குட்டிகளை காத்த செல்லப்பிராணி: சென்னை மணலியில் நெகிழ்ச்சி சம்பவம்!

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் தமிழகத்தில் விடாது அடை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழையானது படிப்படியாக குறைந்தாலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

மழை வெள்ளத்தினால் நீர்நிலை ஏரிகள் முழுவதும் நிரம்பின. இதையடுத்து பூண்டி புழல் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட நிலையில் வெள்ள நீர்கள் கொசஸ்தலை ஆற்றின் வழியாக மணலி, புதுநகர், சடயங்குப்பம், திருமுல்லை வாயில், பக்கிங்கம் கால்வாயில் கலந்து எண்ணூர் முகத்துவாரத்தை அடைகிறது.

இந்நிலையில் நீர்வழி நிலைகளான மணலி, புதுநகர், ஆண்டார்குப்பம், மகாலட்சுமி நகர், சடயங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி ஏரி நீரினால் நிறைந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் முயற்சியால் காசிமேடு மீனவர்கள் 20 படகுகளில் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர். மணலி, புதுநகர், வீச்சூர், சடயங்குப்பம் பகுதிகளில் மக்கள் படகுகளைப் பயன்படுத்தி தங்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மணலி புதுநகரில் குட்டிகளை ஈன்ற செல்லப் பிராணியான நாய் ஒன்று படகு ஓட்டுநரை அழைத்துச் சென்று தனது குட்டிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல சைகை காட்டியது நெகிழ்வை ஏற்படுத்தியது.

காசிமேட்டை சேர்ந்த மீனவர் முருகன் நாய்க்குட்டிகளை பத்திரமாக படகில் ஏற்றிச் சென்று வேறு இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவுகளையும் பால்களையும் வழங்கினார்.

மக்களை மழை நீரிலிருந்தும் வெள்ள நீர் இருந்தும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதை பார்த்து தங்களையும் அழைத்துச்செல்ல உணர்த்திய செல்ல பிராணிகள் செயல் பிரமிப்பை ஏற்படுத்தியது.

Also Read: “மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு”: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!