Tamilnadu
”காற்றுத்தழுத்த தாழ்வுப்பகுதி இல்லைதான்; ஆனா, கனமழைக்கு குறைவிருக்காது” - வானிலை மையம் முக்கிய தகவல்!
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாவிட்டாலும், சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி: தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில நீடிக்கின்றது, இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுசேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரம் 8 செ.மீ. மழையும், திருப்பூண்டி, திருக்குவளை தலா 5 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
காற்றழுத்த வேறுபாடு குறைவு காரணமாக காற்றின் வேகம் குறைந்துள்ளது. இதனால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போதிய அழுத்தம் இல்லை என்ற அவர், வட தமிழகம் வரை சுழற்சி வரை நீடிப்பதால் கடலோர பகுதிகளில் மழை நீடிக்கும் என்றார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாவிட்டாலும், சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் 29ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும்.
இது தமிழக பகுதிகளை நெருங்குமா என ஓரிரு நாளில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டார்.
Also Read
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!