Tamilnadu

“அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்க வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் தமிழ்நாடு அரசு” : ‘தினகரன்’ நாளேடு !

தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் கால் பதிக்க வலிமையான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. விரைவில் அது சாத்தியமாகும் என ‘தினகரன்’ நாளேடு 23.11.2021 தேதியிட்ட இதழில் ‘வலிமையான அரசு’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் பெரும் பாதிப்பில் இருந்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளை முதல்வர் தொடர்ச்சியாக பார்வையிட்டு வந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும் பார்வையிட்டு விவசாயிகளிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். தமிழக அரசின் இந்த துரித நடவடிக்கையால் மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார். தொடர்ந்து, கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ‘ஜெட் வேகத்தில்’ செயல்பட்டு வருகிறது. குறைகளை கேட்டறிந்து பொதுமக்களின் வீடுகளுக்கே முதல்வர் நேரில் சென்று அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் புதுப்புது திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களில் மக்களை கண்ணும் கருத்துமாக தமிழக அரசு பாதுகாத்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து தகவல் கொடுத்தால், உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைக்கால நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ முகாம்களை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தற்போது, தரமான மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் எளிதாக கிடைப்பதால் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக ஆய்வு என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன. ஆனால், மக்கள் தெளிவாக உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் நாடகத்தை ஒரு போதும் மக்கள் நம்பமாட்டார்கள். வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வரே நேரில் சென்று பார்வையிட்டு, அதற்கான மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். அரசியல் செய்வதற்காகவும், மக்களை திசை திருப்புவதற்காகவும் எதிர்க்கட்சிகள் ஆய்வு நடத்தி வருகிறது. அரசின் அதிவேக நடவடிக்கையால் பெரும் பாதிப்பில் இருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதை எதிர்க்கட்சிகள் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் அனைத்து துறைகளிலும் வலுவான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக அனைத்து துறைகளிலும் கால் பதிக்க, வலிமையான கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. விரைவில் அது சாத்தியமாகும்.

Also Read: “நடிகை கங்கனா ரனாவத் இருக்கும் சூடு, சொரணை EPS - OPS இருந்திருந்தால் இப்படி பேசுவார்களா?”: முரசொலி சாடல்!