Tamilnadu

யூடியூப் பிரபலம் 'டாடி' ஆறுமுகத்தின் மகன் உட்பட 3 பேரை கைது செய்த புதுச்சேரி போலிஸ்... நடந்தது என்ன?

குடிபோதையில் தகராறு செய்த யூட்யூப் பிரபலம் டாடி ஆறுமுகத்தின் மகன் உட்பட 3 பேரை புதுச்சேரி போலிஸார் கைது செய்தனர்.

‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’ எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் ‘டாடி’ ஆறுமுகம். சமையல் காணொளிகள் மூலம் புகழ்பெற்ற இவருக்குச் சொந்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அசைவ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத், தன் சித்தப்பா மகன்கள் ஜெயராம், தாமு உள்ளிட்ட நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளார். அப்போது மது போதையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களை கோபிநாத்தும் அவர் நண்பர்களும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

மது அருந்த அரசு அனுமதித்திருக்கும் நேரமான இரவு 11 மணியை தாண்டிய பிறகும் அங்கிருந்த ஊழியர்களிடம் மது கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் 11 மணிக்கு மேல் மது கொடுக்க முடியாது என அங்கிருந்த ஊழியர் கூறியதால் அவரை பாட்டிலால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அதேபோல, உணவகத்திலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், சாலையில் நின்றும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த முத்தியால்பேட்டை போலிஸார் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது போலிஸாரையும் அவர்கள் தாக்க முயற்சி செய்தனர். இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் வரச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

அவர் காவல் நிலையம் செல்லாத நிலையில், டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத், டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராம், தாமு ஆகியோரைக் கைது செய்த போலிஸார், ஊழியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also Read: வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்.. தன் உயிரைக் கொடுத்து இருவரைக் காப்பாற்றிய வீரர் : நடந்தது என்ன?