Tamilnadu

“10, +2 பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!

குழந்தைகளுக்கான உதவி எண்கள் 1098 மற்றும் 14417 ஆகியவை குறித்த ஸ்டிக்கர்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 54வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு நூலகர்களுக்கான நல் நூலகர் விருதை 33 பேருக்கு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்.

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது, கடந்த ஆண்டுகளைப் போலவே வினாத்தாள் வடிவமைப்பு இருக்கும்.

பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டு போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் இந்தாண்டு புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

குழந்தைகளுக்கான உதவி எண்கள் 1098 மற்றும் 14417 ஆகியவை குறித்த ஸ்டிக்கர்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!