Tamilnadu

‘இது என் மரண வாக்குமூலம்’... ஆளுநரின் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு தேஜஸ் என்பவர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆளுநர் ஆரிப் முகமது கானை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு இவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிக்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து தேஜஸ் வெளியே வராததால் அருகில் இருந்த சக காவலர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தேஜஸ் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் விரைந்து வந்த போலிஸார் தேஜஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், அவர் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலிஸாரின் கையில் தேஜஸ் எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், “ இது என் மரண வாக்குமூலம். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் இறக்கப்போகிறேன். என் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். என் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், தனது வாட்ஸ்அப்பில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப்போகிறேன் என ஸ்டேட்டஸ் ஒன்றும் வைத்துள்ளார். ஆளுநரின் கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது” : கொலையாளிகள் சிக்கியது எப்படி?