Tamilnadu

கரூரில் வாகனம் மோதி பலியான ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் உத்தரவு!

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ் (57). இவர் இன்று காலை 9.30 மணியளவில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த முயன்றபோது வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கனகராஜ், சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர், நா.கனகராஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் நா.கனகராஜ், இன்று 22-11-2021 காலை கரூர்-திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நா.கனகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள், பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நா.கனகராஜ், அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இந்தியாவிலேயே முதன் முறை.. தடய மரபணு தேடல் மென்பொருள்‌ சேவையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!