Tamilnadu

“கோட்சேவுக்கு வீரவணக்கம்?” : சிவசேனா நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு திருப்பூரில் வீரவணக்க நாள் கொண்டாடிய சிவசேனா கட்சி நிர்வாகி மீது ஊரக காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சே 1949-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

தேசத் தந்தை காந்தியடிகளை கொலை செய்த நாதுராம் கோட்சேவை இன்றளவும் இந்துத்வவாதிகள் மாவீரராகக் கொண்டாடி வருகின்றனர். குஜராத் உள்ளிட்ட இந்துத்வ சிந்தனை பெருகிய மாநிலங்களில் ஆண்டுதோறும் கோட்சேவுக்கு வீரவணக்க நாள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் யுவ சேனா சார்பில் கோட்சே நினைவுநாள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டாது. அப்போது கோட்சேவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாதுராம் கோட்சேவிற்கு திருப்பூரில் வீரவணக்க நாள் கொண்டாடிய சிவசேனா கட்சியின் யுவசேனா அமைப்பின் மாநில தலைவர் திருமுருக தினேஷ் மீது ஊரக காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி... ராஜேந்திரபாலாஜி மீது போலிஸார் வழக்குப்பதிவு!