Tamilnadu

“கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கருதியே இந்த முடிவு” : அமைச்சர் பொன்முடி பேட்டி!

ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு, செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன.

கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தி, சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்தது.

இதுகுறித்து 11 மாணவ அமைப்பினருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். ஆஃப்லைன் தேர்வுக்கு மாணவர்கள் சங்கத்தினர் ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையில் 2 மாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தியது நீங்க.. மாநில அரசு குறைக்கணுமா?”- பா.ஜ.கவினருக்கு நிதி அமைச்சர் பதிலடி!