Tamilnadu

ஆள் கடத்தல் புகார்.. நீதிமன்ற காவலில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகரை சந்தித்த பா.ம.க MLA-வால் சர்ச்சை!

அ.தி.மு.க விவசாய அணியின் மாநில தலைவராகவும், தருமபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வருபவர், தாளப்பள்ளம் பகுதியை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன். இவருக்கு சொந்தமான கல்குவாரியில் பணிபுரிந்த ஜல்மாரம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், முத்துவேல் ஆகிய இரு இளைஞர்களையும் கடத்தி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

அன்பழகனுக்கு உதவியதாக மகேந்திரன், முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் அன்பழகனை நேற்று பென்னாகரம் போலிஸார் கைது செய்தனர். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாக டி.ஆர்.அன்பழகன் கூறவே, முதலில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சையிலிருந்த மருத்துவமனைக்கே நேரில் வந்திருந்த பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் (பிரவீணா) டி.ஆர்.அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளார். கைதுக்கு பயந்து டி.ஆர்.அன்பழகன் நெஞ்சுவலி என நாடகம் நடித்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

டி.ஆர்.அன்பழகன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமானவராகவும், கல்குவாரி, அரசின் சாலை ஒப்பந்த பணிகள், கட்டிட பணிகள் என பல்வேறு பணிகளையும் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பெற்றுள்ளார். அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்த சமயத்திலேயே இவர் மீது பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை, இந்த நிலையில் தான் தற்போது ஆள் கடத்தல் புகாரில் டி.ஆர்.அன்பழகன் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பிரமுகரை பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் நேரில் சந்தித்து அவரிடம் கலந்துரையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு!