Tamilnadu

வீட்டு வாயிலில் விளையாடியதால் ஆத்திரம்; சாவி கொத்தை வீசி தாக்குதல் - 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீட்டு வாசலில் விளையாடிய சிறுவனை விரட்ட கொத்து சாவி வீசியதில் சிறுவனின் இடது கண் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வா.உ.சி நகர் பகுதியிலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி நந்தகுமார். இவரது பத்து வயது மகன் மிதுன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த தண்ணீர் கேன் போடும் ஆனந்த் என்பவர் சிறுவன் மிதுனை கண்டித்துள்ளார்.

வேறு இடத்தில் விளையாட சொல்லி விரட்டியுள்ளார். ஆனால் சிறுவன் சிறிது நேரத்தில் விளையாடிவிட்டு சென்றுவிடுவதாக கூறியுள்ளான். அதற்கு என்னை எதிர்த்துப் பேசுகிறாயா என்று கூறி ஆத்திரத்தில் கையில் இருந்த கொத்து சாவியை எடுத்து சிறுவன் முகத்தில் வீசி உள்ளார்.

சிறுவனின் இடது கண்ணில் சாவி கொத்து பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவன் வீட்டுக்கு தகவல் கூறி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கண் மிகவும் பாதிப்படைந்ததால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனின் கண்ணை பரிசோதித்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆனந்தை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.