Tamilnadu

“இது விவசாயிகள் நல அரசு” : கோரிக்கையை ஏற்று உடனடியாக கரும்பை பொங்கல் பரிசுத் தொகுப்பில் சேர்க்க உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் பொங்கல் தொகுப்பில் இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகையின்போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் இன்று வெளியாகியிருக்கும் ஆணையின்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் வழங்கப்படும்; கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு ஆகிய பொருட்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ.1088 கோடி நிதியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் பொங்கல் தொகுப்பில் இடம்பெற முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பையுடன் முழுக்கரும்பும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார். தங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கரும்பும் வழங்கப்படும் என ஆரசு அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Also Read: தைப் பொங்கல் பரிசு.. 20 வகை மளிகை பொருட்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை - குவியும் பாராட்டு!