Tamilnadu

விஜய் சேதுபதிக்கு பகிரங்க மிரட்டல்... அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்த கோவை போலிஸ்!

நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூபாய் 1001 பரிசு அளிக்கப்படும் என அறிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதி, முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்தியதாகவும் அவரை உதைப்பவர்களுக்கு ரூபாய் 1001 பரிசு வழங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக இன்று கோவை பி1 கடைவீதி காவல்நிலையத்தில் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக, ‘ஜெய்பீம்’ படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பா.ம.க மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: மக்களுக்கு ஒரு நியாயம்? உங்களுக்கு ஒரு நியாயம்? இ-பாஸ் வாங்காமல் திண்டுக்கல் வரைச்சென்ற அர்ஜூன் சம்பத்!