Tamilnadu

”தனியாருக்கு நிகராக வலியதோர் உலகம் செய்வோம்” - வலிமை சிமெண்ட் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் வலிமை சிமெண்ட் தயாரித்து விற்கப்படும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் மலிவு விலையிலான அரசு சிமெண்ட்டின் புதிய ரகமான வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,

வலியதோர் உலகம் செய்வோம் எனும் கருத்தை மையமாக கொண்டு இந்த சிமெண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக உறுதி தன்மையுடனும் விரைவாக உலரும் தன்மையுடனும் தயாரிக்கப்படும் வலிமை சிமெண்ட் 350 மற்றும் 365 ரூபாய் என இரண்டு தரத்தில் விற்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும் மாதத்திற்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட்டை உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிமெண்ட் விலையை தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே நிர்ணயித்து வரும் நிலையில், அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலிமை சிமெண்ட் விற்பனை மூலம் தனியார் நிறுவனங்களின் சிமெண்ட்டின் விலையும் கணிசமாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் விளம்பர உத்திகளை கையாளவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை அரசின் கட்டுமான திட்டங்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அரசு சிமெண்ட், வலிமை சிமெண்ட் என்ற பெயரில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் வந்துள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Also Read: விற்பனைக்கு வந்தது ‘வலிமை’ சிமெண்ட்... தரமிக்க புதிய ரகத்தினை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!