Tamilnadu

ஷேர் மார்க்கெட்தான் எல்லாம்; வருமானம் போனதால் தூக்கிட்டு தற்கொலை - திருப்பெரும்புதூரில் பரபரப்பு!

மதுரை மாவட்டம் கே ஒன்னிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (29). இவருக்கு நாகவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகேயுள்ள வல்லக்கோட்டை சிவன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

சந்திரசேகர் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நாகவேணி உறவினரின் சுபநிகழ்ச்சிகாக மதுரைக்கு சென்று இருந்த நிலையில் வீட்டில் சந்திரசேகரும் அவரது தந்தை அழகர்சாமியும் வீட்டில் இருந்துள்ளனர்.

இவரது தந்தை அழகர்சாமி பணி நிமித்தமாக நேற்று இரவு சென்னை சென்று விட்டு காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அழகர்சாமி நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலிசார் சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஷேர் மார்க்கெட்டில் அதிகம் நஷ்டம் ஏற்பட்டதால் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்நிகழ்வு பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.