Tamilnadu

சமோசாவால் வந்த வினை.. தவறான பில்லுக்கு உணவக உரிமையாளர் கொலை - மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்டம், கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பு முத்துக்குமார் என்பவர் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது கடைக்குக் கண்ணன் என்பவர் சாப்பிட வந்துள்ளார். பின்னர், கண்ணன் இட்டிலி சாப்பிட்டு முடித்தவுடன் உணவ ஊழியர் 'பில்' கொடுத்துள்ளார்.

அப்போது இட்லியுடன் சேர்த்து சமோசாவிற்கான தொகையும் பில்லில் சேர்க்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணன் உணவக உரிமையாளர் முத்துக்குமாரிடம், 'நான் சமோசா சாப்பிடவில்லை' என கூறியுள்ளார். ஆனால் முத்துக்குமார்,'நீங்கள் சமோசா சாப்பிட்டுள்ளீர்' என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த கண்ணன் உணவகத்திலிருந்த விறகுக் கட்டையை எடுத்து முத்துக்குமாரைச் சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் உடனே அங்கிருந்து கண்ணன் தப்பியோடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் உணவக உரிமையாளர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த கண்ணனை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவறான சமோசா பில்லுக்காக உணவக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மருத்துவமனை பணியாளரின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. கரூர் மருத்துவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு!