Tamilnadu

“வெள்ளத்தில் சிக்கிய 26 பசுமாடுகள் 4 மணி நேரத்தில் மீட்பு” : ‘நிஜ பசுக்காவலர்’களுக்கு குவியும் பாராட்டு!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் நடுவே திட்டு பகுதி அதிகம் உள்ளது. இந்த பகுதிக்கு ஆற்றின் அருகே இருக்கும் சந்தைப்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர்களின் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேய்ச்சலுக்குச் சென்ற 26 மாடுகள் திட்டுப்பகுதியிலேயே மாட்டிக்கொண்டது.

இதை அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அச்சமடைந்து வேதனையடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார், தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் இரண்டு பைபர் படகுகளில் திட்டுப்பகுதிக்குச் சென்று ஒவ்வொரு மாடுகளாக படகில் ஏற்றி 4 மணி நேரத்தில் 26 மாடுகளையும் கரைக்கு பத்திரமாக மீட்டு வந்தனர்.

பின்னர், பசுமாடுகளை பத்திரமாக மீட்டதற்கு அதிகாரிகளுக்கும், நீச்சல் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குச் சந்தைப்படுகை கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை துரிதமாக மீட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டுகுள் குவிந்து வருகிறது.

Also Read: “எடப்பாடி தொடங்கிய மேட்டூர் அணையின் உபரிநீர் திட்ட கரை உடைப்பு” : அ.தி.மு.க அரசின் டெண்டர் ஊழல் அம்பலம்!