Tamilnadu

“பட்டா வாங்கி தருவதாக நரிக்குறவ மக்களிடம் பண மோசடி” : ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் போலி சாமியார் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த காரணந்தாங்கள் அருள் நகர் பகுதியில் 45 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதேபகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கருப்புசாமி கோவில் ஒன்றை கட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போலி சாமியார் மணி பூசாரி என்பவர் குறி சொல்லி வந்துள்ளார்.

குறி கேட்க வரும் பக்தர்களை ஏமாற்றி பல கோடிகளை வருமானமாக ஈட்டி கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திருப்பெரும்புதூரில் செல்வாக்கு மிக்க பூசாரியாக அடியாட்களுடன் வலம் வந்தார். மேலும் இந்த கோவிலின் அருகே வசிக்கும் நரிக்குறவர்களிடம் 2017 ஆம் ஆண்டு பட்டா வாங்கி தருவதாக ஏமாற்றி பத்தாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.

45 நரிக்குறவர் குடும்பங்கள் மற்றும் புதிதாக திருமணமான நரிக்குறவர் இளைஞர்கள் என 85 பேரிடம் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு பட்டா வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். இந்நிலையில் போலி சாமியார் மணி பூசாரியிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த நரிக்குறவர்கள் பணத்தை திருப்பி கேட்டதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து அடியாட்களை அழைத்து வந்து மிரட்டி அவர்கள் வசித்து வந்த பகுதியை விட்டு விரட்டியும் உள்ளார்.

பண பலத்தைக் கொண்டுள்ள மணி பூசாரியை எதிர்க்க முடியாததால் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் மணி பூசாரி இடம் பணம் கொடுத்து ஏமாந்த நரிக்குறவர்கள் 2018 முதல் தஞ்சம் புகுந்து மணி பூசாரிக்கு பயந்து வாழ்ந்து வந்தனர். தற்போது தி.மு.க ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இதுகுறித்து பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

திருப்பெரும்புதூர் வருவாய்க் கோட்டாட்சியர் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் இடம் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருப்பெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மணி பூசாரி நரிக்குறவர் இன மக்களிடம் பண மோசடி செய்ததும் அவர்கள் குடியிருந்த பகுதியில் இருந்து விரட்டியதும் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து விசாரணைக்கு பின் மணி பூசாரியை திருப்பெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு வழங்கப்படும்” : கூடுதல் தலைமைச் செயலாளர் பேட்டி!