Tamilnadu

மீண்டும் மிரட்டும் காற்றழுத்த தாழ்வு: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், “வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று 15ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக கன்னியாகுமரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும் சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று (நவ.,12) குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும், நாளையும் (நவ.,12,13) கேரளா கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 56 சதவீதம் அதிகமாகப் பொழிந்துள்ளது. சென்னையில் 5 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு... சென்னையை புரட்டியெடுத்த மழை : புள்ளி விவரங்களை வெளியிட்ட வெதர்மேன்!