Tamilnadu

அரசு வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.2 கோடி மோசடி.. அ.தி.மு.க பெண் நிர்வாகியை கைது செய்த போலிஸ்!

நாமக்கல் மாவட்டம், ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் கல்யாணி. அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் மகளிரணி தலைவி என்ற பெயரில் பெண்களைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த செல்வாக்கைப் பயன்படுத்திக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஓடப்பளியை சேர்ந்த தங்கராசு என்பவரின் சகோதரர் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர்களிடம் கல்யாணி ரூ. 8 லட்சம் பெற்றுள்ளார்.

இதையடுத்து ரயில்வேயில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறி போலியான உத்தரவு கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு வேலைக்குச் சென்றபோது இது போலியானது என தெரிந்ததால் தங்கராஜ், கல்யாணி வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் போலிஸார் கல்யாணியைக் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்துள்ளார். இதுகுறித்து போலிஸாருக்கு புகார்கள் வந்ததை அடுத்து அ.தி.மு.க ஆட்சியைப் பயன்படுத்தித் தப்பித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகதீஷ்வரன், மதிவதனி ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.12 லட்சம் என ரூ.24 லட்சத்தைக் கல்யாணி வாங்கியுள்ளார். பின்னர் போலியான அரசு நியமன உத்தரவை வழங்கியுள்ளார்.

இதனை அறிந்த அவர்கள் கல்யாணி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கல்யாணி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பத்து பேருக்கு போலியான அரசு நியமன உத்தரவை வழங்கி ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் போலிஸார் கல்யாணியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

Also Read: “இந்த தலை அந்த உடலோடு...” : போட்டோஷாப் செய்து மாட்டிக்கொண்ட வானதி சீனிவாசனின் அடடே விளக்கம்!