Tamilnadu

கழிவுகளை அகற்ற மனிதர்களா? - ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூறிய முக்கிய தகவல்!

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

தமிழ்நாட்டில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி அரசுத்தரப்பில் தெரிவித்தார்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மாற்று வேலை உள்ளது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும்

கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Also Read: பத்மஸ்ரீ விருது விழா மேடையில் வெறும் காலுடன் 72 வயது நின்ற மூதாட்டி... யார் இந்த துளசி கவுடா?