Tamilnadu

மழை பாதிப்பு குறித்து போலி புகைப்படங்கள்.. பா.ஜ.க - அ.தி.மு.க கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25 ஆம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரித படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

இதனையடுத்து சென்னை மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முழுவேகத்தோடு பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் படி, நீச்சல் தெரிந்தவர்கள் 19,547, மரம் அறுக்கத் தெரிந்தவர்கள் 15,912, பாம்பு பிடிப்பவர்கள் 3,117, கால்நடைகளின் பாதுகாப்பிற்காக 19,535 என சுமார் 1.05 இலட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னதாக, வெள்ளப் பாதிப்பை பார்வையிடுவதாகக் கூறி படகில் ஏறிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஆங்கிள் பார்த்து படப்பிடிப்பு நடத்திய வீடியோ வைரல் ஆகியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது போலிப் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆனால் தி.மு.க அரசு செய்யும் பேரிடர் மற்றும் நிவாரணப்பணிகளை களங்கப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க ஆட்சியின் போது ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து தற்போது நடந்தது போல திரித்து போலி புகைப்படங்களை அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கும்பலைச் சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இது கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த புகைப்படம் என விளக்கம் கொடுத்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, பா.ஜ.கவின் பொருளாளராக இருக்கும் எஸ்.ஆர்.சேகர், புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில், வெள்ளபாதிப்பில் சிக்கிய மக்கள் குடிதண்ணீருக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பது போல் இருக்கிறது. ஆனால் அந்த புகைப்படம் 2017ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இது கடந்த பழைய புகைப்படம் என விளக்கம் கொடுத்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also Read: ‘மழைய வைச்சு அண்ணன் பண்ணப்போற அரசியல பாரு’: சவால்விட்ட அண்ணாமலை - Behind The Scenes வீடியோவால் அதிர்ச்சி!