Tamilnadu

தீவிரமடையும் பருவமழை; சென்னை உட்பட மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் என்ன? விவரம் இதோ

தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழை – நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

”தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை செய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 7.11.2021 வரை 332.0 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 232.8 மி.மீட்டரை விட 43 சதவீதம் கூடுதல் ஆகும்.

அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 160 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 81 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், 50,451 உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெருகநகர சென்னை மாநகராட்சியின் 166 தெருக்களில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 13 சுரங்கப்பாதைகளில், 5 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 8 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 27 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மண்டலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், இந்த மாவட்டங்களில் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே இந்த உபரி நீர் செல்லும் ஆற்றின் இருகரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுவான தகவல் நடைமுறை (Common Alert Protocol) வாயிலாக, இந்தப் பகுதிகளில் வசிக்கும் 4.09 இலட்சம் நபர்களது தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (07.11.2021) சென்னையின் பல பகுதிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 7.11.2021 நாளிட்ட அறிவிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 9.11.2021 அன்று உருவாகும் என்றும், இது வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கக்கடல் பகுதியில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 9.11.2021 முதல் 12.11.2021 வரை வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு தீயணைப்புத் துறையும், அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. மீன்வளத் துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

முதல் நிலை மீட்பாளர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 JCB கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 இராட்சத பம்புகள் உள்ளிட்ட தேடல் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வானிலை முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க 21000 உயர் VHF கருவிகளும், 600 செயற்கைகோள் தொலைபேசிகளும், 296 NAVTEX and NAVIC உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு ஹெலிபேட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், நிவாரண முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: மேயர்..எதிர்க்கட்சி தலைவர்.. முதல்வர்: களத்தில் முன்வரிசையில் நிற்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டு!