Tamilnadu

தீபாவளி சீட்டு மோசடி.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் : நடந்தது என்ன?

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கோவூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகியோரிடம் 2013ஆம் ஆண்டு தீபாவளி சீட்டிற்குப் பணம் கட்டியுள்ளார்.

மேலும், தனது பகுதியைச் சேர்ந்த 14 பேரையும் தீபாவளி சீட்டிற்குப் பணம் கட்டும்படி கோரி அவர்களையும் இதில் சேர்த்துள்ளார். இப்படி தீபாவளி சீட்டு மூலம் தம்பதிகள் ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகியோர் ரூ. 65 லட்சத்து 97 ஆயிரத்து 700 வசூல் செய்துள்ளனர்.

ஆனால், இந்த தம்பதியர் அறிவித்ததைப் போல் தீபாவளிக்கு பணத்தைத் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து புருஷோத்தமன் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில் தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராமமூர்த்தி, உமா மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் 2 வருடங்கள் சிறைத் தண்டனையும், வசூலித்த பணத்தை உரியவர்களிடம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!