Tamilnadu

“பள்ளிப்படிப்பை கைவிட்ட 1,28,000 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்”: அமைச்சர் நெகிழ்ச்சி!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலணியில் புதிய கட்டப்பட்ட ரேசன் கடையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மாநில அளவில் கல்வி கொள்கை உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டு விரைவில் மாநிலத்திற்கான கல்வி கொள்கை உருவாக்கப்படும்.

கொரோனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களை தேடி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடைப்பெற்று வருகிறது. 5 மாதத்தில் பள்ளியிலிருந்து இடை நின்ற 1,28,000 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம். பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

இல்லம் தேடி கல்வி திட்டம் முதற்கட்டமாக இரண்டு வாரங்கள் 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் வரும் கருத்துக்கள், நடைமுறை சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து மாநிலம் முழுவதும் செயல்படுத்துவோம். இது திராவிட திட்டம் என முதலமைச்சர் கூறியுள்ளார். இதில் எந்த அமைப்பினரும் உள்ளே வர முடியாது. இதற்கான தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்பதை கண்காணிக்க மாநில அளவில்,மாவட்ட அளவில், ஒன்றிய அளவில், பள்ளி அளவில் என 4 குழுக்கள் அமைக்கப்படும். அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கிறோம்.

இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது கடந்த இரண்டாண்டுகளாக மாணவர்கள் பள்ளியில் சென்று கற்க முடியாததை கற்றுக்கொடுக்கத்தான். இதனால் பள்ளி கல்வியில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதனால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 2020ம் ஆண்டுக்கான ‘விளக்கு விருது’ : கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தேர்வு!