Tamilnadu

“வந்தவாசிக்கு எப்டி போறது?” : வழி கேட்பதுபோல வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்.. 24 மணி நேரத்திற்குள் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ். இவர் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் சதீஷ் பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் வந்தவாசிக்கு எப்படிச் செல்வது என வழி கேட்டுள்ளனர்.

அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த ஒரு சவரன் நகை, செல்போன், மணி பர்ஸ் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதையடுத்து சதீஷ் இதுகுறித்து அருகே இருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே போலிஸார் மர்ம கும்பலைப் பிடிக்க அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அரசு ஊழியர் சதீஷை தாக்கியது பூபாலன், யோகேஷ் குமார், ராகுல் ஆகிய இளைஞர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் போலிஸார் அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். மேலும் குற்றவாளிகளுக்குத் தலைமறைவாக இருக்க அடைக்கலம் கொடுத்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்தனர்.

அரசு ஊழியரைத் தாக்கி வழிப்பறி சம்பவம் நடந்து 24 மணி நேரத்திலேயே குற்றவாளிகளைப் பிடித்த அனக்காவூர் போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: "திருடர் குல திலகம்... 6 மாதங்களில் 100 டூவீலர்கள் திருட்டு" : பலே கொள்ளையன் போலிஸில் சிக்கியது எப்படி?