Tamilnadu
“ஜூலை 18ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள்” : முந்தைய அரசின் பொருத்தமற்ற உத்தரவை மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேளரா, ஒடிசா ஆகியவற்றின் பகுதிகள் பிரிக்கப்பட்டபிறகு, மதராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டவேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு கலைஞர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மணிமண்டம் எழுப்பப்பட்டது.
1957ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க முதன்முறையாக வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் என காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றவில்லை.
1967ம் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு, 1968 -ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “1956ஆம் ஆண்டு நவம்பர் 1 -ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு சூலை - 18 - ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!