Tamilnadu

"மாண்புமிகு முதலமைச்சரை மாண்போடு சந்திக்கவேண்டும் என்று இத்தனை நாளாக காத்திருந்தேன்": பார்த்திபன் பேட்டி!

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ஆர்.பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த 'ஒத்த செருப்பு' படத்துக்கு சிறந்த படத்திற்கான நடுவர் தேர்வு விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆர்.பார்த்திபன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பார்த்திபன், “மாண்புமிகு முதலமைச்சரை முதல்வரான பின் மாண்போடு சந்திக்க வேண்டும் என்று காத்திருந்தேன். கொரோனா காலகட்டம் என்பதால் விசேஷமான தருணம் வரும்போது சந்திக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.

30 ஆண்டுகளில் மூன்றாவது தேசிய விருது கிடைத்துள்ளது. பெரும் போராட்டத்துக்குப் பின் தேசிய விருது கிடைத்துள்ளது. பராசக்தி மாதிரியான படங்கள் பணம் சம்பாதிக்க வந்தவை அல்ல. மாற்றத்திற்காக வந்த படங்கள். அதேபோன்று ஒத்த செருப்பு ஒரு விளிம்புநிலை மனிதன் குறித்த படம்தான். நவீன பராசக்தி போன்ற படம்தான்.

தமிழன் எடுத்த படத்தை அங்கீகரித்து ஒரு விருது கிடைப்பது பெருமை. இந்தப் பெருமையை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எண்ணினேன் மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது.

முதலமைச்சரை சந்தித்தபோது, பொறுமை கடலினும் பெரிது என்பார்கள் ஆனால், உங்களுடைய பொறுமை பிரபஞ்சத்தை விடப் பெரியது என்று கூறினேன்.

தமிழ்நாட்டின் சிறந்த படங்கள் என்று தேர்ந்தெடுத்து மானியம் கொடுப்பார்கள். அதேபோன்று, எனது அடுத்த படம் 'இரவின் நிழல்' உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் படம். அந்த படத்தை முன்கூட்டியே அரசாங்கம் மூலமாக அங்கீகாரம் கொடுத்து, முன்னேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை பொறுமையாக கேட்டுக் கொண்டார்.

'ஒத்த செருப்பு' திரைப்படத்தை முதலமைச்சர் பார்த்தேன் என்று கூறினார். சிறப்பான படமாக இருந்தது என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” எனத் தெரிவித்தார்.

Also Read: கரடிப்பட்டி டு ஹைதராபாத் IIT.. அரசுப் பள்ளி மாணவரின் முழு கல்விச் செலவையும் ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!