Tamilnadu

ரூ.17 லட்சம் பண மோசடி... எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது போலிஸ் வழக்குப் பதிவு!

சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் அ.தி.மு.க ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்தார்.

அப்போது மணி, அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக செல்வக்குமார் என்பவர் மூலம் ரூ.17 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வன், கடந்த மாதம் 26ஆம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலிஸார் விசாரணை செய்ததில் ரூ.17 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி நடந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

முன்னதாக, ஓமலூர், செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி செல்வகுமார் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக 77 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக மணி மீது புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "கூட்டுறவு பண்டக சாலையில் 4.5 கோடி மோசடி செய்த அ.தி.மு.க": பதிவாளரிடம் தொ.மு.ச புகார்!