Tamilnadu

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தவிர வேறு என்ன சாட்சி தேவை? - சென்னை உயர் நீதிமன்றம்

அறியாமையையும், தனிமையையும் பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களை தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூபன் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூபன் தரப்பில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று அந்த இடத்தில் இல்லை என்றும், சிறுமியை தவிர வேறு சாட்சியங்கள் யாரும் இல்லாத நிலையில் தனக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் இதே சிறுமியிடம் ஏற்கனவே தவறாக நடக்க முயற்சித்ததாகவும், சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த தீர்ப்பில், குழந்தைகளின் அறியாமையையும், தனிமையுயும் பயன்படுத்தி குற்றவாளிகள் செயல்படும் இதுபோன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு நேரடி அல்லது தனிப்பட்ட சாட்சியங்களையோ எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்ட கோவை நீதிமன்ற தீர்ப்பு சரியானது எனக் கூறி, அதை எதிர்த்த ரூபனின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Also Read: “தாய், குழந்தையை காட்டாற்று வெள்ளத்திலிருந்து மீட்ட தீரமிக்க இளைஞர்கள்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!