Tamilnadu

மனைவி மற்றும் அவரது தோழியை அரிவாளால் வெட்டிய கணவன்.. 15 நிமிடத்தில் மடக்கி பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டு. இவருக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு தீஜேஸ்ரீ என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனைப் பிரிந்து மஞ்சுளா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மஞ்சுளா தனது தோழி செல்வி என்பவருடன் துணி துவைப்பதற்காகப் பாலாற்றிற்குச் சென்றுள்ளார்.

அங்கு வந்த, கிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென மறைத்து எடுத்து வந்த அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தோழி தடுக்க முயன்றபோது அவரையும் குட்டு அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் 15 நிமிடத்திலேயே தப்பிச் சென்ற குட்டுவை வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கைக்குழந்தையுடன் பேருந்துகளுக்கு இடையே சிக்கி உயிர்தப்பிய தம்பதி... பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!