Tamilnadu

உயர்ரக நாய் வளர்ப்பதில் தகராறு.. இளைஞரை சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு தப்பியோடிய அண்ணன், தம்பி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கமலேஷ் வயது 22. இவர் உயர்ரக நாய் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நாயை அதே பகுதியில் உள்ள தேவா என்பவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்துள்ளார். தேவா நாயை சரியாக பராமரிக்க வில்லை என்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கமலேஷ் தேவாவை தாக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று அதேபகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பின்புறம் கமலேஷ் மற்றும் அவரது தம்பி ஹரிஷ் நண்பர்களுடன் இருந்தபோது அதே குடியிருப்பு பகுதியை சேர்ந்த அஜித்(19) தன் நண்பர்களுடன் கமலேஷ் ஹரிஷ் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார். அஜித் கமலேஷிடம் சென்று தேவாவை தாக்கியது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடனே கமலேஷ் அஜித்தை அடிக்க அஜித் கமலேஷை திருப்பி அடிக்க இருவருக்குமான சண்டை முற்றியது. உடனே ஆத்திரமடைந்த கமலேஷ் மற்றும் அவரது தம்பி ஹரிஷ் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தின் கழுத்தை அறுத்து தலையில் மாறி மாறி வெட்டியுள்ளனர்.

உடனே அஜித் மயக்க நிலையில் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த இருவரும் அஜித் இறந்துவிட்டார் என்று நினைத்து சென்றுவிட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் அஜித்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அஜித்தை மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அஜித் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் திருப்பெரும்புதூர் டி.எஸ்.பி மணிகண்டன் மற்றும் ஒரகடம் காவல்துறையினர் அதிவேகமாக செயல்பட்டு ஒரு சில மணி நேரங்களில் கமலேஷ் மற்றும் ஹரிசை கைது செய்து ஒரகடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு நேர்ந்த கதி.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!