Tamilnadu

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு நேர்ந்த கதி.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பங்களா தெருவைச் சேர்ந்தவர் கிருபைராஜ். இவரது மனைவி புஷ்பலதா. இவர் காமராஜ் நகரில் உள்ள மசாலா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் புஷ்பலதா நேற்று வேலைக்குச் செல்வதற்காக காமராஜ் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென புஷ்பலதா கழுத்திலிருந்த தங்க நகையைப் பறித்துவிட்டுத் தப்பிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பலதா கூச்சலிட்டு கத்தினார். உடனே தங்கச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பேரையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் இருவரையும் போலிஸாரிடம் ஒப்படைத்தனர். போலிஸார் நடத்திய விசாரணையில் இருவரும் விஜயநாராயணத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் ராஜேஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து புஷ்பலதாவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இரண்டு வாலிபர்களையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை.. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்: நடந்தது என்ன?