Tamilnadu

கொடநாடு கொலை வழக்கிலும் இளங்கோவன்? : அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் வழக்கில் எடப்பாடியின் நெருக்கிய நண்பரான இளங்கோவனிடம் விசாரணை நடத்தத் தனிப்படை போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய கொலை, கொள்ளை சம்பவத்திற்குப் பின் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமானமுறையில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக கனகராஜ் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணை துவங்கியுள்ளது.

இதையடுத்து தனிப்படை போலிஸார் கனகராஜ் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கனகராஜின் சகோதரர் தனபால் அளித்த வாக்குமூலத்தின் பேரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவனிடம் விசாரணை நடத்தத் தனிப்படை போலிஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த இரண்டு நாட்களாக இளங்கோவனுக்குத் தொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை செய்தனர். இதில் ரூ.29 லட்சம் பணம், 21 கிலோ தங்க நகைகள், சொகுசு கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.70 கோடிக்கு வெளிநாடுகளில் அந்நிய செலாவணியில் முதலீடு செய்துள்ளதையும் லஞ்ச ஒழிப்பு போலிஸார் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் ரெய்டு.. பின்னணி என்ன?