Tamilnadu

“தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : கண்ணகி நகரில் நடந்த நெகிழ்ச்சி! (album)

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.10.2021) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆறாவது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினையொட்டி சென்னை, ஓக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகர் மற்றும் எழில் நகரில் கோவிட் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அதன்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இதுவரை ஐந்து தீவிர கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 5 கோடியே 43 இலட்சத்து 23 ஆயிரத்து 51 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆறாவது முறையாக தீவிர கோவிட் தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்று (23.10.2021) சென்னை, ஓக்கியம் துரைப்பாக்கம், எழில் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் கண்ணகி நகரில் உள்ள அரசு இ-சேவை மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்று வரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

Also Read: “தி.நகர் - கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு” : பொதுமக்கள் உற்சாகம்!