Tamilnadu

“தொடரும் நீட் முறைகேடு - OMR சீட்டில் வெளியான அதிர்ச்சி தகவல்” : தமிழ்நாடு மாணவர் ‘பகீர்’ குற்றச்சாட்டு !

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார். இவருடைய மகன் ஆயுஸ் வயது 18. இவர் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு எழுதியுள்ளார். இதற்காக ஒரு வருடத்திற்கு மேலாக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று இரவு தூங்காமல் கண் விழித்து படித்து பயிற்சி பெற்று 180 கேள்விகளில் 177 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.எம்.ஆர் ஷீட் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்தபோது வெறும் ஐந்து கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துள்ளதாக இருந்ததால் ஆயுஸ் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆயூசின் தந்தை சுசில்குமார் நீட் தேர்வு நடத்துகிற என்.டி.ஏ நிறுவனம், பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தும் எந்தவித பதிலும் வராததால் ஓ.எம்.ஆர் சீட்டில் நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக ஆன்லைன் மூலம் ஒரு கேள்விக்கு 200 ரூபாய் வீதம் 177 கேள்விகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆயுஸ் எழுதிய விடையை சரிபார்த்துள்ளார்.

அதற்கும் இதுவரை எந்தவித பதிலும் NTA நிறுவனம் தெரிவிக்கவில்லை. இன்னும் சில தினங்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், என்ன செய்வது என்று மனக்குழப்பத்தில் மாணவன் ஆயுஸ் மற்றும் குடும்பமே மிகவும் வருத்தத்துடனும் வேதனையிலும் உள்ளனர்.

ஏற்கனவே நீட் தேர்வுகளால் தமிழகத்தில் பல மாணவர்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், தற்போது இதுபோன்ற குளறுபடிகளால் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற ஒன்றிய அரசு வழி வகுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Also Read: “‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு” : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பேட்டி!