Tamilnadu

விவாகரத்து வழங்காததால் ஆத்திரம்... மேட்ரிமோனியில் மனைவிக்கு வரன் தேடிய கணவன் கைது!

திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சியை 2016ஆம் ஆண்டு ஓம் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்த ஜான்சிக்கு திருமணமான சிலநாட்களிலேயே அமெரிக்காவில் வேலை கிடைத்துள்ளது. இதனால் கணவன், மனைவி இருவரும் அமெரிக்கா சென்றனர்.

இதையடுத்து சில மாதங்களிலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை பிரிந்து ஓம் குமார் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் அமெரிக்காவை விட்டு வெளியேறி சொந்த ஊரான வெள்ளியூரில் வசித்து வந்துள்ளார்.

பின்னர் ஓம் குமார் விவாகரத்து கோரி பூவிருந்தவல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மனைவி ஜான்சியை பழிவாங்க வேண்டும் என நினைத்த ஓம் குமார், மேட்ரிமோனியில் ஜான்சிக்கு வரன் தேடுவதுபோல் தவறான தகவல்களைப் பதிவு செய்து கணவனைத் தேடிவந்துள்ளார். மேலும் தொடர்புக்கு ஜான்சியின் தந்தை பத்மநாபனின் தெலைபேசி எண்ணைப் பதிவு செய்துள்ளார்.

இதனால், ஜான்சி குறித்து பலரும் பத்மநாபனுக்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலிஸார் விசாரணை செய்ததில் ஓம் குமார்தான் ஜான்சி பெயரில் போலியாக மேட்ரிமோனியில் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் ஓம் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “பெட்ரோல் விலை 200-ஐ கடந்தால் 3 பேர் செல்லலாம்” : ஐடியா என்ற பெயரில் விபரீத யோசனை சொன்ன பா.ஜ.க தலைவர் !