Tamilnadu

சொன்ன அடுத்த நாளே அதிரடி நடவடிக்கை... தி.மு.க அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை ஐகோர்ட்!

தமிழ்நாடு முதலமைச்சரின் கான்வாய் செல்லும்போது போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர்நீதிமன்றத்திற்கு வரமுடியாமல் காலதாமதமானது. இதையடுத்து கடந்தமுறை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, சில கருத்துகளை தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரை இன்று நேரில் ஆஜராக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மூலம் தெரிவித்திருந்தார்.

அதன்படி நேரில் ஆஜரான உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள் எனத் தெரிவித்தார்.

நீதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்கவேண்டாம், யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது என்றும், அடுத்தநாளே இதுதொடர்பாக போக்குவரத்தை சீரமைத்ததற்கு நன்றி என்றும் தெரிவித்தார். இதன் மூலம் நீதிபதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய உள்துறை செயலாளர் பிரபாகர், முதல்வரின் கான்வாய் வாகனங்கள் 12-லிருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், எதிரில் வரும் வாகனம் நிறுத்தப்படுவது இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதி, அதேநேரத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

Also Read: “பிளாஸ்டிக் ஒழிப்பு: தமிழக அரசுக்கு பாராட்டு.. ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” - ஐகோர்ட் கேள்வி!