Tamilnadu
LKG படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் அதிரடி!
புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி, கலிதீர்த்தல்குப்பம் என்னுமிடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய எர்லம் பெரேரா என்பவர், எல்.கே.ஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருபுவனை போலிஸார், போக்ஸோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும், மருத்துவ ஆதாரங்கள் வழக்குக்கு ஆதரவாக இல்லை எனக் கூறி, ஆசிரியரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திருபுவனை போலிஸார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமி, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது எனவும், ஆசிரியர் பெரேரா குற்றம் புரிந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அவரை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், வழக்கின் புலன் விசாரணையில் உள்ள குறைகளால் குற்றவாளிகள் தப்பி விடுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற வழக்குகளில் குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தேட வேண்டும் எனவும் கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!