Tamilnadu

வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை.. போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் - 2 இளஞ்சிறார் உட்பட 4 பேர் கைது!

தூத்துக்குடியில் சோரீஸ்புரம், நியூ சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த சுப்பரமணியன் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடுபோனது. மேலும் 11ம் தேதி அன்று முத்தம்மாள் காலனி பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் என்பவரது மனைவி அம்சவள்ளி என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் தங்க நகைகள் திருடிச் சென்றுவிட்டனர்.

அதேபோன்று கடந்த 8 ஆம் தேதி அன்று தூத்துக்குடி கே.டி.சி நகர் பகுதியை சேர்ந்த சுதானந்தம் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றதாகவும், திருடுபோன நகைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி இந்திராநகரைச் சேர்ந்த மாரிச்செல்வம், கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த முனீஸ்துரை மற்றும் 2 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேரும் மேற்படி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 16ம் தேதி தனிப்படையினர் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எதிரிகள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 32 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு எங்கெங்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து, தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலிஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

தொடர்ந்து செய்தியாளரும் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார், “போலிஸாரை தாக்கியதால் சுட்டுகொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன் உடன் இருந்து தப்பி சென்ற 2 பேரில் ஓருவரான திருச்சியை சார்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்” : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!