Tamilnadu

தவறுதலாக குப்பையில் விழுந்த 100g தங்கம்; நேர்மை தவறாது ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு!

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் கணேஷ் ராமன், மனைவி ஷோபனா ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குப்பைகளுடன் சேர்த்து தவறுதலாக 100 கிராம் தங்க நாணயத்தை குப்பை தொட்டியில் வீசியுள்ளனர்.

பின்னர் வீடுகளை தூய்மை செய்து விட்டு பார்த்தபோது நகை காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து சாத்தாங்காடு காவல் நிலையத்தில் கணேஷ் ராமன்புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலிஸார் தூய்மைப் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை குப்பைகளை தரம் பிரிக்கும் போது மேரி என்ற துய்மை பணியாளரிடம் 100 கிராம் தங்க நாணயம் கிடைத்திருப்பதாக, மேரி தனது மேலதிகாரி கௌதம் என்பவரிடம் தங்க நாணயத்தை ஒப்படைத்தார். உடனடியாக தங்க நாணயம் கிடைத்திருப்பதாக சாத்தாங்காடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு 100 கிராம் நாணயத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து சாத்தாங்காடு காவல் நிலையத்திற்கு கணேஷ் ராமனை வரவழைத்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உரியவரிடம் தங்க நாணயத்தை ஒப்படைத்தார்.

ஐந்து லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்க நாணயம் குப்பையில் கிடைத்தாலும் அதனை அபகரிக்க நினைக்காமல் காவல்நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளர் மேரியின் நேர்மையை பாராட்டியுள்ளார் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர்.

Also Read: ”என்ன குறை இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க” - காவலர்களுக்கு நம்பிக்கையளித்த டிஜிபி சைலேந்திரபாபு!