Tamilnadu

“23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை தேவை” : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்ட காலப் பிரச்சினையில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டுமென்றும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு வலியுறுத்துமாறு இந்திய பிரதமரை தனது கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமர் மோடி, உரிய வழிமுறைகளைக் கையாண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: “எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு எனக்கு ஒருபோதும் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்