Tamilnadu

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹82 லட்சம் சுருட்டல்; 5 ஆண்டுகளாக இழுத்தடிப்பு; பட்டதாரி வாலிபர் தர்ணா!

மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 82 லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட உதவி செயற்பொறியாளரின் வீட்டின் முன்பு பணத்தை இழந்த பாதிக்கப்பட்ட இளைஞர் தன் தாயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (31) BBA படித்துள்ளார். இவர் திருவொற்றியூரில் உள்ள ஏகமாள் தேவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வருவது வழக்கம். அப்போது வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் பாபுவிடம் சுரேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் இரும்பு பொருட்களை ஒப்பந்த முறையில் எடுத்து தொழில் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி இரண்டு மாதங்களில் இரண்டு லட்ச ரூபாய் வாங்கி 3 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்து ஆசையை தூண்டி உள்ளார். இதனால் முழுவதுமாக நம்பிய சுரேஷ், அடிக்கடி பணம் கொடுத்திருக்கிறார்.

இதனைப் பயன்படுத்திய பாபு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுக சிறுக பணத்தை வாங்கி உள்ளார். இரண்டு தவணையாக 40 லட்சம் என 82 லட்சம் ரூபாய் சுரேஷிடம் பணத்தை பெற்று கொண்டு மின்சார வாரியத்தில் வாங்கி தருவதாக ஏமாற்றி உள்ளார்.

இதனையடுத்து பாபுவிடம் பணத்தை கேட்ட சுரேஷ் 40 லட்சம் ரூபாய்க்கு காசோலையை கொடுத்துள்ளார். அதனை வங்கியில் கொடுத்து போது பாபுவின் வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரியவந்தது. ஐந்தாண்டு காலமாக பலமுறை பணம் கேட்டும் தர மறுத்ததால் இன்று காலை சுரேஷ் தனது தாயாருடன் எர்ணாவூரில் உள்ள பாபுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இவர்களை கண்டதும் உதவி பொறியாளர் பாபு வேகமாக சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தனது தாயாருடன் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலிஸார் சுரேஷிடம் விசாரித்தபோது பல முறை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கணவன் மனைவி இருவரும் மின்வாரியத்தில் வேலை செய்து தன்னை ஏமாற்றி 82 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக புகார் கூறினார்.

இதனையடுத்து எண்ணூர் போலிஸார் இது சம்பந்தமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.