Tamilnadu

மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் மோடி அரசு.. NIEPMD நிறுவனத்தை மாற்றத் துடிப்பது ஏன்? - பகீர் பின்னணி!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1974 ஆம் ஆண்டு தொடங்கி ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த நிறுவனம் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு தொடர்பான இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் பட்டயப்படிப்புகள் போன்றவற்றையும் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெற்காசியாவிலேயே ஒரே ஒரு நிறுவனமாக ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களின் மேம்பாட்டிற்காக சேவை செய்துவரும் இந்த நிறுவனத்தை தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் செயல்பட்டு வரும் NIEPID நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட அதாவது 21 வகையான குறைபாடுகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தை, ஒரே ஒரு குறைபாடுக்கு (மனநலம்) சிகிச்சை அளித்து வரும் ஒரு நிறுவனத்துடன் இணைக்க முயற்சிப்பது முறையா என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படும் இந்த நிறுவனம் வேறு மாநிலத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய முடிவுகளையும் மருத்துவ சிகிச்சைக்கு மற்றும் படிப்புக்கான அனுமதி போன்றவற்றையும் இனி செகந்திராபாத்தில் உள்ள தலைமையகத்தில் கேட்டுப்பெற வேண்டிய சூழல் உருவாகும் என சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

Also Read: பாலியல் வன்கொடுமையால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்களின் வயது... NCRB வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!