Tamilnadu

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் அடித்துக்கொலை - தம்பிகள் வெறிச்செயல்!

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பிகள் கல்லால் அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி தெற்கு கரும்பனூர் சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (47). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாரியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை மாரியப்பன் மனைவி சாந்தி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். மாரியப்பனின் சித்தி மகன்களான இசக்கிமுத்து, பாஸ்கர் ஆகியோர் மாரியப்பன் வீட்டின் அருகே இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்த மாரியப்பனுக்கும் தம்பிகள் இசக்கிமுத்து பாஸ்கர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன், ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்தவர் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மாரியப்பனை தம்பிகள் கல்லால் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கொலையுண்ட மாரியப்பனின் தம்பிகள் இசக்கிமுத்து மற்றும் பாஸ்கர் ஆகியோரை பிடித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: தொடர் தேடுதல் வேட்டை... துப்பாக்கியுடன் காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையன் என்கவுன்டர்.. நடந்தது என்ன?